முகப்பு

பதினைந்தாயிரத்தைத் தாண்டிய அழைப்புகள், இடையறாத பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உதவி அழைப்புமையம்

graphic johny tom varghese
 தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் கரோனா ஊரடங்கு காரணமாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு உதவும் பொருட்டு இலவச அழைப்புமையம் ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அழைப்பு மையத்திற்கு கடந்த சனிக்கிழமை இரவுவரை 15328 அழைப்புகள் வந்திருக்கின்றன.

இது குறித்துப் பேசிய துறை அதிகாரிகள், “அர்ப்பணிப்பு மிக்க 42 நபர்களைக்கொண்டு நிர்வகிக்கப்படும் இந்த அழைப்பு மையத்தின் மூலம் பெறப்படும் அழைப்புகள் உரிய வடிவில் மாற்றப்பட்டு, தொடர்புடைய மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன” என்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கிஸ் இதுகுறித்து கூறும்போது, “இதுவரை நாங்கள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 66463 நபர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். அழைப்பு மையத்தால் பெறப்படும் அழைப்புகள் தேவைகளின் அடிப்படையில் முறையாக வகைப்படுத்தப்பட்டு, மென்பொருள்கள் உதவியுடன் உரிய வடிவில் தொடர்புடைய மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வுகாணப்படுகின்றன. பெரும்பாலான அழைப்புகள் உணவு மற்றும் மருந்து தேவைகள் சார்ந்தும், மருத்துவ உதவிகள் வேண்டியும் செய்யப்படுகின்றன” என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி எண் 18004250111 மாற்றுத்திறனாளிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதோடு, அவர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதேசமயம், உணவுப்போருட்கள் தேவை என அழைப்பு மேற்கொண்டால், உரிய அலுவலர்கள் ரேஷன் பொருட்களை வழங்கிவிட்டு, அட்டையில் அதனைப் பதிவிட்டுக் கடமையை முடித்துக்கொள்வதையும் களத்தில் காண முடிகிறது. சிறப்பு உதவிகளைச் செய்ய கடமைப்பட்டிருக்கிற அரசு, எல்லோருக்கும் வழங்கும் அதே ரேஷன் பொருட்களை வழங்குவதை சிறப்பு கவனம் என்று சொல்ல இயலாது. இந்தக்குறை விரைந்து களையப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.
  வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment