முகப்பு

"பேருந்து நிலையங்களில் பெட்டிக்கடைகள், மாவட்டந்ந்தோறும் தொழில்ப்பயிற்சி மையங்கள்" கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?

31 ஆகஸ்ட், 2020
graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் லோகோ
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக தனி மனித இடைவெளி, தொடுதலைத் தவிர்த்தல் போன்றவை புதிய இயல்பு (new normal) வாழ்வியல் முறைகளாக வலியுறுத்தப்படுகின்றன. தொட்டுத் தடவிப் பார்த்தல், கையைப் பற்றி நடந்து செல்வது போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நெருக்கடியான சூழ்நிலையில் சுய தொழில் நடத்திவரும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள, இந்தப் புதிய வாழ்வியல் முறைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ள மற்றும் அதற்கு அரசின் ஆதரவைக் கோரும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அவர்களின் பங்கேற்புடன் 26.7.2020 அன்று ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் மூலமாக இணைய வழிக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
 அந்தக் கருத்தரங்கில் பார்வை மாற்றுத்திறனாளிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொகுத்துப் பார்ப்போம். இதனைப் படிக்கும் உங்கள் மனதிலும் ஏதேனும் புதிய கோரிக்கைகள் தோன்றுமானாள் எங்களுக்குச் சொல்லுங்கள்.
1. கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையும் தொழிலும் முற்றிலுமாக முடங்கிவிட்டது. மேலும் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புகள் சிறிதளவு கூட ஏற்படவில்லை. ஆகவே தற்போதைய நெருக்கடி மட்டுமின்றி எதிர்காலம் குறித்த அச்சமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே இடைக்கால நிவாரணமாக குறைந்தபட்சமாக ஆறு மாத காலத்திற்கு நியாய விலைக் கடைகள் மூலமாக உணவுப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். மேலும் தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் மாதந்தோறும் குறைந்தபட்சம் இன்னமும் ஆறு மாதத்திற்குத் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

 2. கரோனா நோய்த்தொற்று இன்னமும் சில காலம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது குறைந்தபட்சமாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் மேலும் சில காலம் தனி மனித இடைவெளி அவசியமாகும். ஆகவே பார்வை மாற்றுத்திறனாளிகளின் சுய தொழில்கள் தொடர்ந்து நடத்தும் வகையில் சந்தைப்படுத்தலுக்காக அரசின் ஆதரவு வேண்டப்படுகிறது. அதாவது பேருந்து நிலையம், பூங்கா போன்ற பொது இடங்களில் அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக உள்ள வணிக வளாகக் கடைகளில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையிலான கடைகள் ஒதுக்கப்பட வேண்டும். இதன் மூலமாக கரோனா கால நெருக்கடி தீர்வது மட்டுமின்றி பொதுவாக பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்ணியமான முறையில் தொழில் செய்வதற்கு வழிவகை ஏற்படும்.

3. வணிக வளாகக் கடைகளில் இடம் கிடைக்காத பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் பெட்டிக் கடைகள் வைப்பதற்காக நிதி உதவியுடன் கூடிய உரிமம் வழங்க வேண்டும். மேலும் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இம்மாதிரியான கடைகள் அமைப்பதற்கு அரசு உதவ வேண்டும். கூடுதலாக பார்வை மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் மூலமாக தயாரிக்கும் பொருட்களை அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் கொள்முதல் செய்வதற்கு உரிய ஆணைகள் வெளியிட வேண்டும்.

4. மாற்றுத்திறனாளிகள் பற்றிய விவரங்கள் குறைபாட்டின் அடிப்படை மட்டுமின்றி மேலும் சில கூறுகளின் அடிப்படையிலும் தொகுக்கப்பட வேண்டும். அதாவது ஒரே குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மட்டுமே வருமானம் ஈட்டும் குடும்பங்கள், தம்பதியினர் இருவரும் மாற்றுத்திறனாளிகளாக இருப்போர், தற்காலிகப் பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள், சுய தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகள், தொழிற்பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள், தொடர் சிகிச்சை பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் போன்ற கூறுகளின் அடிப்படையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட வேண்டும்.

5. தம்பதியினர் இருவரும் மாற்றுத்திறனாளிகளாக இருப்போரின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடாக ஒரு சதவீத (1%) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதாவது தற்போது நடைமுறையில் உள்ள மூன்று சதவீத (3%) இட ஒதுக்கீட்டுடன் இந்த ஒரு சதவீத (1%) இட ஒதுக்கீடு கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.

6. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிதி மேம்பாட்டுக் கழகம் ( NHFDC) மூலமாக மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்வதற்கு ரூ. 50,000 நிதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிதி முழுமையாக வழங்கப்படாதது மட்டுமின்றி முறையாக வழங்கப்படுவதும் இல்லை. ஆகவே இந்த நிதி உதவியை மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பெறுவதற்கு உதவ வேண்டும்; மேலும் இந்த நிதி வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

7. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய கல்வித் தகுதி இருந்தும் அரசுப் பணியைப் பெறுவதற்கே பல நேரங்களில் நீதிமன்றம் வரை சென்று போராட வேண்டியிருக்கிறது. இதில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்வோராக உள்ளனர். ஆகவே வங்கிக் கடன் பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். குறிப்பாக பிணை இல்லாத வங்கிக் கடன், மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்பட வேண்டும். மேலும் நீண்ட கோரிக்கையான தொடர்வண்டி மற்றும் தொடர்வண்டி நிலையங்களில் விற்பனை செய்யும் நடைபாதை வியாபாரிகளான பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையுடன் கூடிய உரிமம் வழங்க வேண்டும்.

8. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுக் குடியிருப்புகள் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வீடுகள் ஒதுக்க வேண்டும். இதன் மூலமாக பார்வை மாற்றுத்திறனாளிகள் பொதுச் சமூகத்துடன் இணைந்து, மற்றவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ முடியும்.

9. சாதாரண கூலி வேலைகளுக்கு பார்வை மாற்றுத்திறனாளிகள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை என்பதால் பெரும்பாலும் சுய தொழில் செய்கின்றனர். எனவே முன்னோடியாக 100 நாள் வேலைத் திட்டங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். மேலும் மாவட்ட அளவில் தொழில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட வேண்டும். இதன் மூலமாக வங்கிக் கடன் பெறுதல், சந்தைப்படுத்தல் போன்றவையும் எளிமையாக்கப்பட வேண்டும்.

10. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இந்தத் திட்டங்களைக் கண்காணிக்கவும் குறைகளைத் தெரிவிப்பதற்கும் தீர்ப்பதற்கும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்தக் குழுக்களில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெற வேண்டும்.
தொகுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஒரு மனுவாக ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் ஆணையருக்கு அனுப்பியிருக்கிறது. உங்களுடைய மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் கீழ்க்கண்ட மின்னஞ்சல் வாயிலாக எங்களுக்குத் தெரிவியுங்கள்.
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
தொகுப்பு: கா. செல்வம்
தொடர்புகொள்ள: teacherselvam@gmail.com
* * *
 சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர:
முகநூல்: https://m.facebook.com/savaalmurasu/
வலையொளி: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
கீச்சகம்: https://twitter.com/savaalmurasu
 வாட்ஸ் ஆப்: 9787673244
டெலகிராம்:9994636936

No comments:

Post a Comment