முகப்பு

மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படும் பணிவாய்ப்புகள் என்கிற நடைமுறை அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே

31 ஆகஸ்ட், 2020
graphic ரகுராமன் மற்றும் P.K. பின்ச்சா
இடது ரகுராமன், வலது P.K. பின்ச்சா
கடந்த 2012 ஆம்ஆண்டுவள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித் திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 -  2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, சவால்முரசு வாசகர்களுக்காக அந்த ஒலிக்கோப்பை வழங்கிய திரு. ரகுராமன் அவர்களுக்கு சவால்முரசு ஆசிரியர்க்குழு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆங்கில வழியில் நடைபெற்ற அந்த உரையாடலின் தமிழாக்கத்தின் இரண்டாவது பகுதி  இதோ.
கேள்வி: கல்வியைப் பொருத்தவரை பார்வையற்றோர் இரண்டு விதமான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். சில பார்வையற்றோர் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லாமல் மிகத் தாமதமாகவே பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். சில குறிப்பிட்ட பயிற்சிகள் இருந்தபோதிலும் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை எட்ட முடிவதில்லை. இது போன்ற சிக்கல்களுக்கு   தங்களுடைய ஆலோசனைகளை கூறுங்கள்
 பதில்: பிரிட்ஜ் கோர்ஸ் எனப்படும் புத்தாக்க பயிற்சிகளை கொடுக்கலாம். உங்களுடைய  கருத்துடன்  உடன்படுகிறேன் ரகுராமன்.  அதாவது  பார்வையுள்ள சாதாரண  குழந்தையை  விட பார்வையற்ற குழந்தை சற்று  தாமதமாகவே கல்வியைப்  பெறுகிறது.  அவர்கள் இழந்த காலத்தையும் கல்வியையும் இதுபோன்ற புத்தாக்க பயிற்சிகள் மூலம் ஈடு செய்யலாம்.
கேள்வி:  சிலர் இடையில் திடீர்ப்பார்வை இழப்பைச் சந்திக்கிறார்கள். அவர்கள் மன அளவிலும் செயல் அளவிலும்  பல்வேறு பிரச்சினைகளைக் கடக்க  வேண்டியிருக்கிறது. உதாரணமாக பருவ வயதில் பார்வை இழக்கும் ஒரு கல்லூரி மாணவனை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு தங்களது தீர்வு என்ன?
பதில்: அவர்களை நெறிப்படுத்த இரண்டு மூன்று வழிமுறைகள் இருக்கின்றன. முதலாவது புத்தாக்கப் பயிற்சி. அந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்போது அவர்களில்  அறிவும் திறமையும் படைத்தவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தேவையான தகுதிகளை பெற முடியும். மற்றவர்களுக்கு3 ஆர்ஸ் எனப்படும் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளைக் கற்பிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு வாழ்க்கையை நடத்துவதற்குப் போதிய வருமானம்  தரக்கூடிய  வியாபாரம் உள்ளிட்ட  தொழில்சார் பயிற்சிகளை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் சுய கௌரவத்தோடு வாழ முடியும்.
கேள்வி: வேலை வாய்ப்பைப் பொருத்தவரை பார்வையற்றோர் ஆங்கிலம், தமிழ், வரலாறூ உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளை மட்டுமெ தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற துறைகளைச் சாத்தியப்படுத்த என்ன செய்யலாம்?
பதில்: நான் இப்போது உங்களை ஊனமுற்றோர் நலச் சட்டத்தின் பணி வாய்ப்புகளை அடையாளப்படுத்துகின்ற 32-வது பிரிவுக்கு அழைத்துச் செல்கிறேன். நான் வழக்கமாகக் கூறும் கருத்தையே இப்போதும் முன்வைக்கிறேன். அதாவது பார்வையற்றோர் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பணி வாய்ப்புகளை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நமது எல்லையை ஒரு குறிப்பிட்ட வரையறையோடு நிறுத்திக்கொள்ளும் நிலைக்கு வழிவகுக்கும். இன்னும் சிலர் பணி வாய்ப்புகளை அடையாளப்படுத்தல் என்பது நமக்குப் பயன் அளிக்கக் கூடியதும் அவசியமானதும்கூட  என்றும்  கூறுகின்றனர். இந்தச் சட்டத்தின்  கூறுகள் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளை  வரிசைப்படுத்துவனவாகவும் தேவைப்படும் பட்சத்தில் வழிகாட்டும் ஆவணமாகவும் மட்டுமே இருக்க வேண்டும். இன்னொரு தகவலையும் உங்களோடு மனநிறைவோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது அரசு வெளியிடும் ஊனமுற்றோருக்கான பணி வாய்ப்புகள் குறித்த அறிக்கையை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதன்  இறுதியில் மேற்குறிப்பிட்ட அனைத்தும் விளக்கங்கள் மட்டுமே வரையறை அல்ல என்ற சொற்றொடர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதாவது இந்த பட்டியலில் இடம்பெறாத பணி வாய்ப்புக்களைக் கூட ஊனமுற்றோர்   பெற்றுக்கொள்ளும் தகுதி இருக்கும் பட்சத்தில் அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இதன் பொருள். இந்த நெகிழ்வுத் தன்மையானது ஊனமுற்றோரை பொருத்தவரை நேர்மறையானதும் பலன் விளைவிக்கக் கூடியதுமாகும். இந்த நெகிழ்வுத் தன்மையானது தொடர்வது மட்டுமல்லாமல் வலிமை உடையதாகவும் உருப்பெற வேண்டும். நான்  இந்தப் பொறுப்பை ஏற்ற பின்  மத்திய  அளவிலும் மாநில  அளவிலும் பல சமூக மாற்றங்களை உருவாக்கி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படும் பணிவாய்ப்புகள் என்கிற நடைமுறை அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே. இந்தச் சட்டத்தில்  குறிப்பிடப்படாத பணி வாய்ப்பைப்   தகுதியின் அடிப்படையில் பெற முடிந்த ஊனமுற்றோரின் திறமையை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தெளிவான  வேண்டுகோளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலுவலகங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட சிக்கிம், மிஸோரம்  போன்ற மாநிலங்கள் அரசாணையாக  வெளியிட்டிருக்கின்றன. நான் பெற்றிருக்கும் இந்த பணி வாய்ப்பு கூட மாற்றுத்திறனாளிகளுக்கான பணிவாய்ப்பு  பட்டியலில்  இடம்பெறவில்லை. என்னுடைய முழு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. புரிகிறதா?
கேள்வி: ஐஏஎஸ் பணி வாய்ப்புகளைப் பெறுவதில் இருக்கிற சிரமங்கள் குறித்து.
 பதில்:  உங்களுடைய கேள்வி புரிகிறது. இதோ பதில் அளிக்கிறேன். அரசுப் பணி  என்பது ஒன்று;  ஆட்சிப் பணி என்பது மற்றொன்று. நான் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக  பல சமூகப் பிரச்சனைகளைக் கையில் எடுத்திருக்கிறேன். அதாவது மத்திய அரசின் ஐஏஎஸ் மற்றும் இதரப் பணிகள் மற்றும் மாநில அரசின் மாநில உரிமையியல் பணிகள் குறித்த முக்கியமான , கீழ்க்காநும் கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் முன் வைத்திருக்கிறேன். ஊனமுற்றோர்க்கென்று மத்திய அரசு குறிப்பிடும் 19  பணிகளில் மூன்று மட்டுமே அடையாளப் படுத்தப் பட்டிருக்கின்றன. எனக்கும் அதெ நிலைதான். எனது பணியிடமும் இன்னும் அடையாள படுத்தப்படவில்லை. நான் தனிப்பட்ட முறையில் இந்திய அலுவலகப் பணியாளர் துறைக்கு  எழுதிய கடிதத்தில், சமீப காலமாக உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி முழுப் பார்வையற்றோரையும் நமது மத்திய அரசு மிக உயர்ந்த பதவிகளில் நியமித்திருக்கிறது. அப்படி இருக்க, ஐஏஎஸ் மற்றும் இன்னும் சில பணிகளுக்கு ஒரு முழுப் பார்வையற்றவரை ஏன் நியமிக்கக் கூடாது? மேலும் பார்வையற்றோர் சிலர் சார்ட்டட் அக்கவுண்ட்டண்டாக பணியாற்றும்போது அரசின் அகில இந்திய கணக்கர்  பணிகளுக்கு அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது? அதையெல்லாம் செய்யலாமே. என்ற என்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறேன். இன்னொரு விஷயத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட பொது மற்றும் விளிம்புநிலைப் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நான் எழுதிய கடிதங்கள்   மாற்றுத்திறனாளிகள் முதன்மை அலுவலகத்தின் வலைதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை நீங்கள் சென்று படித்துத் தெரிந்துகொள்ளலாம்.


கெள்வி: சென்னையை சேர்ந்த தினகர் என்பவர் முதன்முறையாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டு ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.
பதில்:  தற்போது நிறைய துறைகளில் நிறைய பார்வையற்றோர் பணி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் திரு பிரகாஷ் குப்தாவும் ஒருவர். ஒரு காலத்தில் குறை பார்வையுடையோருக்கு மட்டுமே பணிகளை வழங்கும் நிலை இருந்தது. இப்போது முழுப் பார்வையற்றோருக்கும் அரசு பணி வழங்கப்படுகிறது. இது உண்மையில் வரவேற்கத்தக்க மாற்றம்தான். எனினும் பார்வையற்றோரின் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. முழு வெற்றி கிட்டும் வரை போராடியே ஆக வேண்டியிருக்கிறது.
கேள்வி: தொழில் நுட்பங்களைப் பொருத்தவரை தற்போது நடைமுறையில் இருக்கும் ஜாஸ் போன்ற மென்பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் சாதாரண பார்வையற்றோர் அதை வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை. விலை குறைப்பிற்கு  எதாவது வாய்ப்பிருக்கிறதா?
பதில்: என்விடீஏ  போன்ற மென்பொருள்கள் தற்பொழுது இலவசமாகவே கிடைக்கின்றன. ஜாஸ் மென்பொருளைப் பொருத்தவரை, அவற்றை வடிவமைத்த அமைப்புகள்  பயன்படுத்த விரும்பும் பார்வையற்றோர் மற்றும் குறை பார்வையற்றோருக்கு மானிய விலையில் கொடுக்க முன்வந்திருக்கின்றன அல்லவா?

கே: தனியார் துறையில் பணியாற்றும் அல்லது சுயதொழில் புரியும் பார்வையற்றோர் அதிக கல்வித்தகுதி இருந்த போதிலும் கடன்களுக்காக வங்கிகளை அணுகும்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. தகுந்த அரசாணைகள் கையில் இருக்கும் போதும் இது போன்ற பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.
ப: இதற்கான உடனடி பதில் என்னிடம் இல்லை. அரசின் முறையான அல்லது சட்டபூர்வமான ஆவணங்களை கையில் எடுத்துக் கொண்டு போராட வேண்டும். அல்லது ஊனமுற்றோருக்கான தேசிய நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தை அணுகலாம். இப்போது நான் உங்களோடு ஒரு கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி போன்ற சொற்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். ஊனமுற்றோர் (handicapped) என்ற சொல் எப்படி உருவானது என்றால், ஆரம்ப காலகட்டத்தில் ஐரோப்பாவைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் கைகளில் கேப்களைப்பயன்படுத்தி பிச்சை எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் அந்தச் சொல் ஊனமுற்றோரோடு தொடர்புபடுத்தப்பட்டது. காரணம் அவர்கள் எந்த செயலையும் செய்யும் திறமை அற்றவர்களாக கருதப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற சொல்லைப் பொருத்தவரை, இந்த உலகில் ஒரு செயலை ஒரே மாதிரியாகச் செய்பவர்கள் என்றோ வெவ்வேறு விதமாக செய்பவர்கள்என்றோ பகுத்துக் காட்ட  முடியாது.  ஒவ்வொருவரும் தனித்தனி இயல்புகளைப் பெற்றிருக்கிறோம். இரண்டாவதாக இன்னொரு விதமாக குறிப்பிடுவதேன்றால் ஒவ்வொருவரும் அவரவர்க்கென்று தனித்தனி சிறப்புகளை பெற்றிருக்கிறோம். மூன்றாவதாக மாற்றுத்திறனாளி என்ற சொல்லின் மூலம்  சமூகத்தின் மாறுபட்ட திறன்களை பெற்றவர்கள் என்ற அழுத்தமான கருத்தை முன் வைக்கிறீர்கள். எங்களின் மாறுபட்ட திறன்களைச் சுட்டுவதை தவிர்த்துவிட்டு சமத்துவத்தை பிரதிபலிக்கும் பரிணாமங்களை பரிசீலனை செய்தல் வேண்டும். ஆக ஊனமுற்றவர் அல்லது பார்வையற்றவர் என்ற சொல் அதற்கான தேவையும் பொருத்தமான சூழலும் அமையும் சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
 ஒரே வகை ஊனமுற்றோர், சார்வகை ஊனமுற்றோர் என்றால் என்ன?
திரு. பின்ச்சா அவர்களுக்குப் பிடித்த ஆங்கிலக் கவிதை எது?
அடுத்த இதழில்.
தமிழில் X. செலின்மேரி
தொடர்புகொள்ள: celinmaryx@gmail.com

* * *
சமூக வலைதளங்களில் எங்களைப் பின்தொடர:
முகநூல்: https://m.facebook.com/savaalmurasu/ 
வலையொளி: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public 
கீச்சகம்: https://twitter.com/savaalmurasu 
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/savaalmurasu24_7/ 

வாட்ஸ் ஆப்: 9787673244
டெலகிராம்:9994636936

No comments:

Post a Comment