முகப்பு

Showing posts with label national education policy draft 2019. Show all posts
Showing posts with label national education policy draft 2019. Show all posts

ஆக்கபூர்வ உரையாடலுக்கு அழைக்கிறது சங்கம்

9 ஆகஸ்ட், 2020
graphic கருத்தரங்க அழைப்பிதழ்
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும்
இணையவெளி கருத்தரங்கம்
புதிய கல்விக் கொள்கையில் பார்வையற்றோர் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
நாள் : இன்று 09.08.2020.
நேரம் : காலை 10. 45 மணி.
இடம் : ஜூம் (Zoom) அரங்கம் / வலையொளி (youtube) நேரலை.
சிறப்பு விருந்தினர்கள் :
கல்வியாளர் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன் அவர்கள்.
சமூக செயல்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள்.
கருத்தாளர்கள் :
Mrs. M. முத்துச்செல்வி, துணைத் தலைவர், அகில இந்திய பார்வையற்றோர்
கூட்டமைப்பு (AICB). மேலாளர், இந்தியன் வங்கி.
Ms. திப்தி பாட்டியா, தலைமை நிர்வாக அலுவலர் (CEO), தேசிய
பார்வையற்றோருக்கான சங்கம், தமிழ்நாடு (NAB Tamilnadu).
Dr. T. நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர், பார்வையற்ற ஆசிரியர்கள்
சங்கம். உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்.
Mr. K.R.P. சரவணமணிகண்டன், மாநில துணைச் செயலர், ஹெலன் கெல்லர்
மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம். தமிழ் பட்டதாரி ஆசிரியர், பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னை.
Dr. K. முருகானந்தன், சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் (Advocacy Committee
Member), பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.
அமைப்புக்கஉழு உறுப்பினர், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை.
Zoom Meeting link :
https://us02web.zoom.us/j/84052429610?pwd=QThyTTRuK2tsTzFGZm84ZVVRUG1DUT09
Meeting ID: 840 5242 9610
Passcode: csgab
ஜூம் அரங்கில் இணைய முடியாதவர்கள் csgab info hub வலையொளி (youtube)
நேரலையில் இணையலாம்.
https://www.youtube.com/channel/UCiIerT9kXUyCGVTgK30dfkw
அனைவரும் வருக!
தலைவர்
V. முத்துசாமி.
பொதுச்செயலாளர்
A.மணிக்கண்ணன்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்
தொலைபேசி எண் : 044–24348628, 044-48548628.
மின்னஞ்சல் : tncsgab@gmail.com
இணையதளம் : www.csgab.org
நன்றி.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது இணையவழிக் கற்றலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் குறித்து ஐந்தே வரிகள்

18 ஜூன், 2020
graphic இணையவழியில் கற்கும் மாணவர்கள்
 நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால், அனைத்து மாநிலங்களுக்குமான இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைப் புத்தகம் ப்ரக்யாதா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உடல்நலம், பாதுகாப்பு போன்றவை தொடர்பான அறிவுரைகளும் அக்கறைகளும் பேசப்பட்டுள்ளன.
அதேசமயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இணையவழி கற்றல் கற்பித்தல் குறித்து வெறுமனே ஐந்து வரையறைகளுடன் கடந்திருப்பது, மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் அக்கறைகொண்டோரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
20 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில், ‘சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் இணையவழி கற்றல் கற்பித்தலுக்கு சில குறிப்புகள்’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் ஒரு சிறு பத்தியில் பின்வரும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
1.சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்குப் பொருத்தமான, உதவும் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.
2.இருக்கிற வள ஆதாரங்களான ஒலிப்புத்தகங்கள்/பேசும் புத்தகங்கள், திரை வாசிப்பான்கள், சைகை மொழியுடன் கூடிய காணொளிகள், ஒலியுடன் கூடிய தொட்டுணரும் கற்றல் சாதனங்களை மேம்படுத்திப் பயன்படுத்துதல்.
3.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) அணுகல் கலைத்திட்டத்தைப் பயன்படுத்தல்.
4.சைகை மொழியுடன் ஒளிபரப்பப்படும் தேசிய திறந்தவெளி பள்ளியின் (NIOS) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க மாணவர்களை ஊக்கப்படுத்துதல்.
5.குழந்தைகளின் பெற்றோர், சிறப்பாசிரியர், உறவினர், நண்பர்களை உள்ளடக்கிய, அவர்களின் விருப்பத்திற்கேற்ற இணைய வகுப்புகளை ஊக்குவித்தல்.
பொதுக்கல்வியே முறையாய்ப் போய்ச் சேராத, அடிப்படை வசதிகளுக்கே திண்டாடும் குடும்பத்தைச் சார்ந்த பெரும்பான்மையான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, இணையவழிக் கற்றலெல்லாம் எட்டாக்கனி என்பதை அரசும் ஆன்றோரும் உணர்வது எப்போது?
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

கருத்துகளுக்கு வலுச்சேருங்கள்

graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
 புதிய கல்விக்கொள்கை வரைவு 2019ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி குறித்தோ, சிறப்புப் பள்ளிகள் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை. உள்ளடங்கிய கல்வியை அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்குமான ஒரே தீர்வாக வைக்கிற புதிய கல்விக்கொள்கையின் வரைவை மிகக் கடுமையாக எதிர்க்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
எனவே, எமது சங்கமானது, புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்தான தனது கருத்துகளைத் தொகுத்து அதனை நடுவண் அரசிற்கு அனுப்பியிருக்கிறது. எங்களின் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கீழே இருக்கிற தொடுப்பைக் க்லிக் செய்து எமது கருத்துகளைப் படிப்பதோடு, மற்றொரு தொடுப்பில் இருக்கிற தனிநபர் கோப்பைப் பதிவிறக்கி, அதில் தங்கள் பெயரை இணைத்து nep.edu@nic.in என்ற மின்னஞ்சலுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கருத்துகளைத் தொகுத்து, அதனை முறைப்படுத்தியதோடு, ஆங்கிலத்தில் ஒரு முக்கிய ஆவணமாக்க் கொண்டுவந்த திருவள்ளுவர் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றான கல்லக்குறிச்சி அரசு கல்லூரியில் பணியாற்றும் முனைவர். கு. முருகானந்தன் அவர்களுக்கு எமது சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

சிறப்புக் குழந்தைகளுக்கான இடம் எங்கே?

நன்றி இந்து தமிழ்த்திசை - வெற்றிக்கொடி:
N பிரியசகி N
உலக மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதத்தினர் மாற்றுத்திறனாளிகள் என்று உலக சுகாதார அமைப்பும் உலக வங்கியும் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் 45 சதவீதத்தினர் படிப்பறிவற்றவர்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் சிறப்புக் குழந்தைகளிலும் 48 சதவீதத்தினர் எட்டாம் வகுப்பைத் தாண்ட முடிவதில்லை. எஞ்சியுள்ளவர்களில் மேல்நிலைக் கல்வி பெறுபவர்கள் 23 சதவீதத்தினர் மட்டுமே.
ஒவ்வோர் ஆண்டும் தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் சேர்க்கை எண்ணிக்கை குறைவதாகவும், உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்படுவதாகவும் யுனெஸ்கோ தெரிவிக்கிறது. இதற்கு வீடு, பள்ளி, சமூகம் எனப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் எல்லாவிதமான தடை களையும் தாண்டி நூறு சதவீதம் கல்வியறிவை எட்டச் செய்ய வேண்டி யது அரசின் கடமை என்கிறது இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.
பழசு புதிதாகுமா?
இந்தப் பின்னணியில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவில் இடம்பெற்றுள்ள ‘சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் கல்வி’ என்ற பிரிவை மேலோட்டமாகப் பார்த்தால், அனைத்தும் சிறப்பாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ல் உள்ள பல அம்சங்களே இப்போது புதிய தேசிய கல்விக் கொள்கையில் தரப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு, பள்ளியில் தடையற்ற சூழல், கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும்படியான கழிவறைகள் எல்லாப் பள்ளிகளிலும், அரசுக் கட்டிடங்களிலும் இருக்க வேண்டும். சிறப்புக் குழந்தை களுக்குத் தேவையான குறிப்பிட்ட கற்றல் கருவிகள் எல்லாப் பள்ளிகளிலும் இருப்பது உறுதி செய்யப்படும் எனப் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளவை யாவும் 2016-லேயே சட்டமாக்கப்பட்டுவிட்டன. தமிழ்நாடு அரசு 2018 ஜூலை மாதம் இதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டுவிட்டது. ஆனால், நடைமுறைப்படுத்த காலக்கெடு ஏதும் அளிக்கப்படாததால், இன்றுவரை பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சிறப்பு ஏற்பாடுகள் எங்கே?
இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் நாடு முழுவதும் இந்தி ஆசிரியர்களின் நியமனத்துக்கென ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறப்புக் குழந்தைகளின் கல்விக்காகப் பணம் ஏதும் ஒதுக்கப்பட்டுள்ளதா, இல்லையெனில் வரைவில் கூறப்பட்டுள்ளவை எப்படி நடைமுறைக்கு வரும்?
மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் அருகில் உள்ள வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் பார்வை சவால் உள்ள மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் தேவைக்கு ஏற்றாற்போல பெரிய எழுத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அல்லது பிரெய்லி புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் புதிய கல்விக் கொள்கை வரைவில் கூறப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அந்தப் பள்ளிகளில் உள்ள சராசரி ஆசிரியர்களுக்கு பிரெய்லி முறையில் கற்பிக்கத் தெரியுமா, அவர்களுக்கு அத்தகைய பயிற்சி அளிக்கப்படுமா?
தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் சிறப்புக் குழந்தை களுக்கென உள்ள நவீனக் கணினிச் செயலிகளைக்கொண்டு கற்பிப்பது குறித்து அரசு ஏன் சிந்திக்கவில்லை? காது கேளாத சிறப்புக் குழந்தை களுக்கு சைகை மொழியில் கற்பிக்க வகை செய்யப்படும் என்கிறார்கள். உள்ளடங்கிய கல்வியில் பிற குழந்தைகளுடன் இவர்களை இணைத்துக்கொண்டு கற்பிக்கையில் ஆசிரியர்கள் இவர்களுக்கென சைகை மொழியில் தனியாக எப்படிக் கற்பிப்பார்கள்?, இதற்கு ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுமா?
வழக்கமான பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகள் மனிதநேயத்துடன் நடத்தப்படுவதை உறுதிசெய்ய மாவட்ட, மாநில அளவில் தகுதிவாய்ந்த பிரதிநிதிகள் நியமிக்கப் பட்டு ஆய்வுகள் நடத்தப்படுமா? ஆதார வள மையங்களில் பதினைந்து பள்ளிகளுக்கு ஒரு சிறப்பாசிரியர் மட்டும்தான் உள்ளார். இதனால் அப்பள்ளிகளைப் பார்வையிட்டு ஆவணங்களைப் பராமரிக்க மட்டுமே நேரம் உள்ளது. பள்ளி தோறும் ஒரு சிறப்பாசிரியராவது நியமிக்கப் பட்டாலன்றி இந்தத் திட்டம் முழுமை பெறாது.
பாடத்திட்டத்தில் மாற்றம் அவசியம்
மனவளர்ச்சியற்ற குழந்தைகள், ஆட்டிசக் குழந்தைகளுக்கு நடத்தை தொடர்பான பிரச்சினைகளும் இருப்பதால் மனநல ஆலோசகர்களின் உதவியும் தேவை. பல சிறப்புக் குழந்தைகளுக்கு பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேச்சுப் பயிற்சி போன்றவையும் தேவைப் படுவதால் அத்தகைய நிபுணர்களும் தேவையான எண்ணிக்கையில் பணியமர்த்தப் பட்டால்தானே இவர்களுக்கு அளிக்கப்படுவது முழுமையான கல்வியாக இருக்கும்!
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சிறப்புக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கத் தேவையான பயிற்சிகள் பாடத்திட்டத்துடனே இணைக்கப்பட வேண்டும். குழந்தைகளின் குறைபாட்டுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம், தேர்வு முறைகள், மதிப்பீட்டு முறைகளில் நெகிழ்வுத்தன்மை தேவை.
சவாலுக்கு மேல் சவால்
தனியே வெளியில் செல்ல இயலாத பல சிறப்புக் குழந்தைகளுக்குப் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உதவி தேவைப்படுகிறது. இதுவே பெருத்த சவால் என்றால் 3, 5, 8 வகுப்புகளில் பொதுத் தேர்வு, 9-ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர் பொதுத் தேர்வுகள் என எட்டுப் பொதுத் தேர்வுகளும் அதற்குப் பிறகு தகுதித் தேர்வு என்பதும் இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்பதால் உயர்கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடுமல்லவா?
அனைவரையும் உள்ளடக்கிய கல்வி பலவகையில் நன்மை தரும் என்றாலும், இதுவரை பெரிதாகச் சாதித்துள்ள மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளிகளில் படித்தவர்களாகவே உள்ளனர். மற்ற குழந்தைகளுடன் வழக்கமான பள்ளிகளில் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியில் படித்த மாற்றுத்திறனாளிகள் (சிறப்புத் தேவை உடையோர், பார்வை அற்றோர், காது கேளாதோர், ஆட்டிசக் குறைபாடு உள்ளோர்) பெரிதாகச் சாதித்துள்ளனரா, இது குறித்த ஆராய்ச்சி ஏதும் உண்டா?
புதிய வழி உண்டா?
சிறப்புக் குழந்தைகள் NIOS திட்டத்தில் பயில வசதி செய்யப்படும் என்கிறது தேசியக் கல்விக் கொள்கை. மாநில அரசு தரும் சலுகைகளால் இரண்டாம் மொழி விலக்கு பெற்று 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு அணுகும்போது கல்வி நிறுவனங்கள் இவர்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை இச்சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமே அறிவார்கள். வழக்கமான பள்ளியில் படித்து வெறும் இரண்டாம் மொழி விலக்கு பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால் NIOS- ல் படித்து வருபவர்கள் மீதான பள்ளிகளின் கண்ணோட்டம் மாற ஆவன செய்யப்படுமா?
தானே எழுத இயலாத சிறப்புக் குழந்தைகளுக்குக் கல்வித்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு ஸ்கிரைபாக வருபவர்கள் குழந்தை சொல்வதைப் புரிந்துகொண்டு சரியாக எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. ஸ்க்ரைப் தேர்வு செய்யும் உரிமையை குழந்தைக்கோ குழந்தையின் பெற்றோருக்கோ தந்தால் குழந்தையின் மொழியை அவர்களால் எளிதில் புரிந்துகொண்டு தேர்வெழுத முடியும். இதில் முறைகேடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது தேர்வு கண்காணிப்பாளரின் கடமை அல்லவா?
இச்சிறப்புக் குழந்தைகள் தொடக்கக் கல்வி நிலையில் தனியார் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், 10-ம் அரசுத் தேர்வு முடிவு பாதிக்கப்படும் என எட்டாம் வகுப்பில் வடிகட்டப்பட்டு பள்ளி மாற்றுச் சான்றிதழ் கொடுக்கப் படுகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு என்ன வழி செய்யப்போகிறது?
மொத்தத்தில் தேசிய கல்விக் கொள்கை வரைவு சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி குறித்த பல விடைகளற்ற குழப்பமான கேள்விகளை நம் முன்வைத்துள்ளது. சிறப்புக் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி என்பது வெறும் சாய்வுதளம், கழிவறை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, முன்பருவ மழலைக் கல்வி தொடங்கி உயர்கல்விவரை பல சவால்கள் நிறைந்தது. முழுமையான, தரமான கல்வி மட்டுமே இக்குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஒளிகூட்டுவதாக இருக்கும் என்பதால், தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடங்கி எல்லா மட்டங்களிலும் இது குறித்த சிறப்புக் கவனம் அவசியம் .
தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்